இந்த உலகத்தில் திறமையில்லாதவர் என்று யாருமே இல்லை.
ஆனால், தன் திறமை என்னவென்று தெரிந்து
கொள்ளாதவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள்.
ஒவ்வொருவரையும் திறமைகொண்டவராகத்தான் இறைவன்
படைக்கிறார். அவர்கள், தம் திறமையைக் கண்டுணர பல்வேறு
வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறார்.
–
ஆனால் அந்த வாய்ப்புகளால் தம் திறமையை வளர்த்துக்
கொள்ளாமல் சுய நம்பிக்கையில்லாமலோ, சோம்பல்பட்டோ,
வேறு ஆதாயங்களை எதிர்பார்த்தோ காலம் கடத்துவதால்
இறைவன் அருளிய நம் அற்புதத் திறமை நமக்குள்ளேயே
புதைந்துபோகிறது.
–
வெறும் பாராட்டுக்காக அல்லாமல், வெறும் வருமானத்துக்காக
இல்லாமல், பொதுச் சேவையாக அந்தத்திறமையை வெளிக்
காட்டுவதும், வளர்த்துக்கொள்வதும் நம் பொறுப்புதான்
என்பதை நாம் உணர்ந்துகொள்ளவில்லை.
–
நம்மைவிட அடுத்தவர் தம் திறமையால் செல்வாக்கும்,
சொல்வாக்கும் பெற்றுப் பரிமளிப்பதைப் பொறாமை நோக்கில்
தான் பார்க்கிறோமே தவிர, அவருக்கு இல்லாத ஒரு திறமை
நம்மிடமும் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமல்
மயங்கிக் கிடக்கிறோம்.
–
‘அப்பாடா, இன்றைய ஒருநாள் கழிந்தது’ என்று பொழுதைத்
தள்ளிடும் போக்கு, இறைவன் கொடுத்திருக்கும் மதிப்பற்ற,
மீண்டும் கிடைக்கவே கிடைக்காத கால அவகாசத்தை,
அவமதிக்கும் செயலாகும்.
–
‘இன்றைக்கு உருப்படியாக என்ன செய்தோம்?’ என்ற இரவு
நேரக் கேள்வியை விட ‘இன்றைக்கு உருப் படியாக என்ன
செய்யப்போகிறோம்’ என்ற காலை நேரக் கேள்விக்கு விடையாக,
சேவகம் செய்ய, காலம் கைகட்டி நமக்கு முன் காத்திருக்கிறது.
–
‘நூறு ரூபா சம்பளத்துக்கு இருநூறு ரூபாய்க்கு வேலை
செய்யறாம்ப்பா’ என்ற பாராட்டு, நாம் சம்பாதிப்பதன் மதிப்பீடு
அல்ல, நம் திறமையின் மதிப்பீடு.
–
இந்த மதிப்பீடு உயர, உயர நம் எதிர்காலமும் வளமாகும்.
தினமும் இறைவணக்கத்தின்போது ‘என் திறமை என்ன, இதை
எப்படி மேம்படுத்துவது?’ என்று கடவுளிடம் கேட்டுக்கொண்டே
இருங்கள், நீங்கள் பெருமகிழ்ச்சி கொள்ளத்தக்க பதிலை
இறைவன் உங்களுக்கு அருள்வார்.
–
பெரும்பாலான சிக்கல்களுக்கு, இறைவனை வணங்கும் நேரம்
எப்படி தீர்வுகளை வழங்குகிறதோ, அதேபோல நம் திறமைகளை
மேம்படுத்திக்கொள்ளவும் அது நல்ல வாய்ப்புகளைத் தந்து
உதவும்.
Filed under: Allgemeines |
Nalla Thaan Irukku Neengal Ezhluthiya Varikal, Ippady Yaar Thaan Irukkiraarkal.