பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்!!
நமக்கு சங்கடங்கள் வரும் போது முதலில் கடவுளைத்தான் நினைப்போம். மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. எனவே தினமும் கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது. அவ்வாறு கோவிலுக்கு தினமும் செல்ல முடியாதவர்கள் வீட்டில் பூஜை அறையை அமைத்து கடவுள் படங்களை வைத்து வழிபடலாம். வீட்டில் பூஜை அறை எப்படி இருக்கவேண்டும் என பார்ப்போம்.
நம் வீட்டில் பூஜை அறையை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்க வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம்.
பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணங்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம்.
பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும்.
தென் – கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப்படங்களை வைக்கக் கூடாது.
பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்கலாம்.
பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். சில வீடுகளில் இடப் பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அலமாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவார்கள்.
அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் துணித் திரை கொண்டு மூடி வைக்க வேண்டும்.
பூஜை அறையில் ஏதேனும் ஒரு இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை தினமும் ஒன்றிரண்டு தடவை பூஜை அறையில் படிக்க வேண்டும். அவ்வாறு படித்தால் வீட்டில் எதிர்மறை எண்ணங்களை நீக்கி நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும்.
அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். பூஜை நேரத்தில், குடும்பத்தினர் எல்லாரும் பத்துநிமிடமாவது செலவழிக்க வேண்டும். கூட்டாக பாடல்களைப் பாடுவது, ஸ்லோகங்களைச் சொல்வது அதிக பலனைத் தரும்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்