என்னமோ சொல்லணும்னு நினைச்சேன்.. மறந்துட்டேன்…’’
‘‘ஸாரி.. இன்னிக்கு உன்னோட பர்த்டே இல்ல… மறந்தே போயிட்டேன்…’’
‘‘ஆமா… இங்கே எதுக்கு வந்தோம்?’’
‘‘இவரை எங்கேயோ பாத்த மாதிரி இருக்கு… ஆனா, யாருன்னு தெரியலையே..!’’ எப்போதாவது மறதி வருவது இயல்பானதுதான். ஆனால், அடிக்கடி இதுபோல் எதையாவது மறந்துவிட்டு அவஸ்தைப்படுகிறீர்களா? ‘‘இது மறதிநோயின் அறிகுறியாக இருக்கலாம்’’ என்கிறது மருத்துவ உலகம்.
வயசானால் மறதி வரத்தானே செய்யும்? என்கிறீர்களா?
இது வயதானவர்கள் சமாச்சாரம் அல்ல..! இருபது ப்ளஸ்களில் இருக்கும் யுவன்கள்,யுவதிகளுக்கும் உள்ள பிரச்னை.‘‘20 முதல் 40 வயது வரையிலான காலகட்டத்தில்தான் படிப்பு, காதல், வேலை, கல்யாணம், குழந்தைகள் என்று வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வுகள் நடக்கின்றன.
இந்த நேரத்தில் ஒருவர் தெளிவான சிந்தனையோடும் நடவடிக்கைகளோடும் இருந்தாக வேண்டும். மறதி நோய் ஏற்பட்டால், இரண்டு திறன்களும் பாதிக்கப்பட்டு தான் போய் சேர விரும்புகிற இடத்தை ஒருவரால் அடைய முடியாமல் போகலாம். ஸோ… மறதியினால் நிறைய நஷ்டம் வருவதை தவிர்க்கவே
முடியாது…’’ அலர்ட் செய்கிறார் நரம்பியல் சிகிச்சை நிபுணர் ஸ்ரீனிவாசன்.
‘சின்ன வயதிலேயே எதனால் மறதி வருகிறது? மறதி ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?’ என்பது உட்பட மேலும் பல சந்தேகங்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்கிறார் அவர்.
எல்லாமே தலைமைச் செயலகம்தான்…‘‘மறதி ஏன் வருகிறது என்பதற்கு முன்னால் மறதி என்றால் என்னவென்று அறிவியல்பூர்வமாகக் கொஞ்சம் பார்ப்போம். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது என எல்லாவற்றையும் பதிய வைத்துக் கொள்வது நமக்குத் தலைமைச் செயலகமாக இருக்கும் மூளையில்தான். அடுக்கடுக்காக மூளையில் பதிவாகும் இந்த கோப்புகளை நமக்குத் தேவைப்பட்டபோது எடுக்க முடியாவிட்டால் அதைத்தான் மறதி என்கிறோம். இதற்குக் காரணம் மூளையில் இருக்கும் நியூரோ டிரான்ஸ்மீட்டர்களின் செயல்களில் ஏற்படும் பாதிப்புதான்.’’
மறதியில் மூன்று வகை
‘‘இளைஞர்களுக்கு ஏற்படும் மறதி நோய்க்கு அம்னீசியா (Amnesia) என்று பெயர். இந்த அம்னீசியாவில் மூன்று வகைகள் இருப்பதாக சமீபத்திய அமெரிக்க ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள். இளைஞர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுவது Anterograde Amnesia என்ற முதல் வகையில்தான். இந்த பாதிப்பு ஏற்பட்டால் இளைஞர்களின் அறிவுத்திறன் பாதிக்கப்படும். சம்பவங்களை மனதில் பதிந்து வைத்துக் கொள்ள முடியாது. பழைய நிகழ்வுகள் நினைவிருக்காது.
பெயர்களில் குழப்பம் இருக்கும். போன பாதையில் திரும்பி வருவதற்குக் கூட சிரமப்படுவார்கள். கடைகளில் சில்லரை வாங்க மறப்பது முதல் செல்போனை வைத்துவிட்டுத் தேடுவது வரை பல அன்றாடப் பிரச்னைகள் அடங்கிய மறதி இது. மனதில் இருப்பதை வெளியில் சொல்லத் தடுமாறுவார்கள். இரண்டாவது வகை Retrograde Amnesia. இது விபத்துகளால் ஏற்படும் மறதி நோய். சினிமாக்களில் பார்த்திருப்போம், தலையில் அடிபட்டவுடன் பழைய நிகழ்ச்சிகளை மறந்துவிடுவார்கள்.
மூன்றாவது வகை Transient Global Amnesia. கொஞ்சம் வினோத மானது. இயல்பாக ஒருவருடன் பார்த்து, பேசி, பழகுவார்கள். ஆனால், சில நிமிடங்களிலேயே தான் பேசிக் கொண்டிருந்த நபரை அடையாளம் தெரியாது.
பேசியதும் நினைவிருக்காது.இது தவிர சமீபத்தில் டிஜிட்டல் டிமென்ஷியா (Digital dementia) என்ற மறதி நோயும் இளைஞர்களிடம் பரவி வருகிறது. தேவைக்கதிகமாக அலைபேசி, கணிப்பொறி, தொலைக்காட்சி, திரைப்படம் என்று மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதால் வரும் மறதி நோய் இது.
இந்தப் பயன்பாடுகளைக் குறைத்தாலே டிஜிட்டல் டிமென்ஷியாவுக்கு ஆளாகாமல் தப்பிக்க முடியும். இந்தக் காரணங்கள் தவிர மரபியல் காரணங்களாலும் மனநலக் கோளாறுகளாலும் சிலருக்கு மறதி நோய் வரலாம்.
எப்படிக் கண்டுபிடிப்பது?
‘‘மறதி நோய் பொதுவாக 20 வயது முதல் 90 வயது வரை யாருக்கு வேண்டுமானாலும் வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால், வயதானவர்களுக்கு வருகிற மறதிநோய்களை அவர்களுடைய குழப்பமான நடவடிக்கையே காட்டிக் கொடுத்து விடும். அதனால்,கண்டுபிடிப்பது சுலபம். ஆனால், இயல்பான நடவடிக்கைகளோடு இருக்கும் இளைஞர்களின் மறதிநோயை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. தங்களைத் தாங்களாகவே உன்னிப்பாகக் கவனித்தாலோ அல்லது அருகில் இருப்பவர்கள் சுட்டிக்காட்டினால் ஒழிய இதைக் கண்டறிவது கொஞ்சம் சிரமம்.’’
என்ன செய்ய வேண்டும்?
‘‘மறதி நோய் இருப்பதாக சந்தேகப்பட்டால் உடனடியாக ஒரு மனநல மருத்துவரிடமோ அல்லது மனநல நரம்பியல் சிகிச்சை நிபுணரிடமோ சென்று ஆலோசனை செய்து கொள்ளலாம்.
அவர்கள் சில பரிசோதனைகளை செய்து மறதி நோய் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடித்துவிடுவார்கள். மறதி நோயைக் கண்டுபிடித்த பிறகு, நரம்பியல் சிகிச்சை நிபுணரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் தொழில், குடும்பம், சமூகம் என பல வகையிலும் நம்முடைய மேம்பட்ட நடவடிக்கைகள் மூலம் பல முன்னேற்றங்கள் கிடைக்கும்.”
டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
*இயல்பிலேயே நம் மூளை சிந்திக்கிற மூளையாகவே இத்தனை காலமாக இருந்தது. ஆனால், தொழில்நுட்பம் என்ற பெயரில் வெறுமனே பார்க்கிற மூளையாக மாற்றிவிட்டோம். புத்தகங்கள் படிக்கும்போது, அது நினைவில் இருக்கும்.
அது பற்றி யோசிப்போம், குறிப்புகள் எடுப்போம். ஆனால், எலெக்ட்ரானிக் திரைகளில் படித்தாலும் கூட அது ஒருவழிப் பாதையாக… கண்கள் மட்டுமே வேலை பார்த்துக் கொண்டு, மூளைக்குத் தொடர்பில்லாமல் இருக்கிறது. இதைத் தவிர்த்து புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தொலைக்காட்சிகள் பார்ப்பதைக் குறைக்க வேண்டும்.
*உணவு வகைகளில் பச்சைக் காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டும். குறிப்பாக பிராக்கோலியும், சிவப்பு திராட்சையும் நினைவுத்திறனை மேம்படுத்துபவை. முட்டைகோஸ் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
*Use it or Loose it என்ற ஆங்கிலப் பழமொழி மூளை விஷயத்தில் 100 சதவிகிதம் பொருந்தும். மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் போட்டிகள், விளையாட்டுகள் என்று மூளையை பிஸியாக வைத்திருப்பது நல்லது.
*மூச்சுப் பயிற்சி, யோகா, தியானம் போன்றவை மூளைக்கு அமைதியைக் கொடுத்து அதன் திறனை மேம்படுத்துபவை. தினமும் 15 நிமிடங்களாவது இதற்காக ஒதுக்குவது நல்ல பலனைக் கொடுக்கும்.
*உடல் நலனுக்கென நாம் எடுத்துக் கொள்ளும் அதிக மருந்துகளாலும் ஞாபகசக்தி பாதிக்கப்படலாம். அதனால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நாமே மருந்துகள் எடுத்துக் கொள்ளக் கூடாது.
*மது, புகை, பான் மசாலாக்கள் போன்ற தீய பழக்கங்கள் நினைவுத்திறனை பாதிப்பதில் பெரிய பங்கு வகிக்கின்றன.
இதனுடன் பால்வினை நோய்களும் நினைவாற்றலைப் பாதிக்கின்றன. எனவே, நினைவாற்றலோடு இருக்க வேண்டும் என்றால் இது போன்ற கெட்ட பழக்கங்களுக்கு குட்பை சொல்வதைத் தவிர வேறு வழியில்லை!
தேவைக்கதிகமாக அலைபேசி, கணிப்பொறி, தொலைக்காட்சி, திரைப்படம் என்று மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதாலும் மறதி நோய் வரும்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்